தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கொலை மிரட்டல்!
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்று தெரியவந்துள்ளதாகவும் அது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எஸ்.பி. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் எம்.எம். மொஹமட் ஆகிய உறுப்பினர்களுக்கு தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு தொலைபேசியில் எச்சரித்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூவரின் வீடுகளுக்கு ஆயுதம் ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சீ.ஐ.டியினர் மேற்கொண்ட விசாரணைகளில், காலி பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரின் பேரில் குறித்த இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் மிரட்டல் அழைப்புகள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்த அதே எண்ணைப் பயன்படுத்தி மிரட்டல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டமையும் தெரிய வந்தது.
மேலும் இந்த விசாரணைகள் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா மொபிடெல் ஆகியவற்றின் உதவியையும் கோரியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.