மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவருக்கு மனைவி வழங்கிய மரண தண்டனை
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் அடிக்கடி தகராறு
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார். இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.
பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.