நாடாளுமன்றுக்கு செல்லும் கொழும்பு பாடசாலை மாணவியின் மரண விவகாரம்
பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது.
இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
'கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள் எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன' என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம், அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோகணேசன் கூறியுள்ளார்.
அதேவேளை, 'இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம். காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்' எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.