நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி ஒருவர் வெட்டி கொலை
இரத்தினபுரியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இரத்தினபுரி, ஹிந்தெல்லன பிரதேசத்தில் நேற்று (22) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மூலம் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் தொடர்பில் தெரிய வந்தவை
ஹிந்தெல்லன பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய நபரொருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய உயிரிழந்தவரின் இரண்டு மகன்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்கள் மற்றும் ஆண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் 18, 65 மற்றும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.