கிழக்கில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள்
திருகோணமலை - வாழைச்சேனை பிரதேச செயலளர் பிரிவின் கட்டப்பாடு கும்புறுமூலையில் உள்ள தோணாவில் காணப்பட்ட மீன்கள் திடீரென நேற்று மாலை (29.01.2024) இறந்து காணப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது தோணாவில் காணப்பட்ட கோல்டன்,செத்தல்,மணலை,கொடுவா என்பன போன்ற பல மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த தோணாவில் உள்ள நீரில் இரசாயன பதார்த்தம் கலந்தமையினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேசவாசிகள் ஊகித்துள்ளதுடன் இவ்வாறான சம்பவம் இதுவரை காலமும் இப் பிரதேசத்தில் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்கு வாழைச்சேனை பொதுசுகாதார பரிசோதகர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமை உத்தியோகத்தர்கள், கடல் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கல்குடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.