இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவானுள்ள காற்று சுழற்சி, அடுத்த சில நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது 2026 ஜனவரி 02ஆம் திகதி தாழமுக்கமாக வலுப்பெற்று, இலங்கையின் கிழக்கு–தென்கிழக்கு கரையோரப் பகுதிகளில் நிலவி, பின்னர் இலங்கைக்கு தெற்காக மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வானிலை மாற்றத்தின் தாக்கமாக, இன்று கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் மழை ஆரம்பமாகியுள்ளது. நாளை (29.12.2025) வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

நாளை மறுதினம் (30.12.2025) முதல் வடக்கு, கிழக்கு, வட மத்திய, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மழை பரவலடையும் என முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
மேலும், 31.12.2025 முதல் 04.01.2026 வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, வட மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம்.
குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் மிகக் கனமழை ஏற்படலாம். பதுளை, நுவரெலியா, காலி, மாத்தறை, கண்டி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 31.12.2025 மற்றும் 2026 ஜனவரி 01, 02, 03 திகதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.

31.12.2025 அன்று கொஸ்லாந்தை, வெல்லவாய, புத்தள, கல்மதுல்ல, ஹப்புத்தள, அதல ஆகிய பகுதிகளிலும், 01.01.2026 அன்று வெலிப்பிட்ட, கொரவின்ன, லபுகெங்கொட, மித்தெனிய, திருகோணமலை பகுதிகளிலும், 02.01.2026 அன்று நாகெட்டிய, லெமஸ்தோட்ட, கொட்டபத்ம, ஏகொடவத்த உள்ளிட்ட பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கனமழை காரணமாக மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும்.
எனவே மலையகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்காலப்பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான அபாயங்களை கருத்தில் கொண்டு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.