ஈரான் தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சேதங்கள் மறைக்கப்படுகின்றனவா?
இஸ்ரேல் மீது ஈரான் முன்னெடுத்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உண்மையான சேத விபரங்களை இஸ்ரேலிய இராணுவம் மறைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஈரானியத் தாக்குதல்களால் இராணுவ நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரங்கள் இஸ்ரேலிய இராணுவத் தணிக்கையினால் (Military Censorship) முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இராணுவம் அனுமதிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் காணொளிகள் மட்டுமே ஊடகங்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பொதுமக்களின் கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களே வெளியிட அனுமதிக்கப்படுகின்றன.

முன்னதாக வானூர்தி நிலையத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்கள் கூட சில நாட்களுக்குப் பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் தொடர்ச்சியாக அபாய எச்சரிக்கை ஒலிகள் (Sirens) எழுப்பப்படுவதால், மக்கள் அடிக்கடி பாதுகாப்பு அறைகளை நோக்கித் தஞ்சமடைய வேண்டியுள்ளது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. போர் நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் (Ben Gurion) சர்வதேச வானூர்தி நிலையத்தின் வான் போக்குவரத்து சேவைகள் மேலும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலை எப்போது சரிசெய்ய முடியும் என்பது குறித்து இஸ்ரேலிய இராணுவத்தால் இதுவரை தெளிவான விளக்கத்தை வழங்க முடியவில்லை என அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.