யாழில் மூன்றுமாடி கட்டிடத்தால் தம்பதியினர் எடுத்த திடீர் முடிவு
யாழில் பக்கத்து வீட்டாரது மூன்றுமாடி வீட்டுக் கட்டிடத்தால் தமது வீட்டிற்கு பாதிப்பு என்று கூறி கணவன்- மனைவி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்று காலை வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி நெல்லியடி கிழக்கு ராணி மில் வீதியை சேர்ந்த தம்பதியரே இவ்வாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை வாசலில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்றாம் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மாடி வீடு தமக்கு பாதிப்பு என கூறி பிரதேச சபையில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை எந்தவிமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையிலேயே இன்று தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பிற்பகல் 12:30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி போலீசார் குறித்த போராட்டக்காரர் மற்றும் கரவெட்டி பிரதேச சபை செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமான கட்டிடத்தை அமைப்பவருக்கு எதிராக தாம் தமது சபை சட்டத்தரணி ஊடாக வழக்கு தாக்கல் செய்வதாக உறுதிமொழி வழங்கியதன் பிரகாரம் குறித்த போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் கூறுகையில்,
“கடந்த 3 மாதங்களாக தனிப்பட்ட காரணங்களினால் சபைக்கு வர முடியவில்லை. இன்று காலையில் சபைக்கு வந்த போது வாயிலில் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். ஏன் என கேட்ட போது, தொலைக்காட்சி செய்தியாளர் என கூறிக்கொண்டு ஒருவர் இடைப்புகுந்து படம்பிடித்தார்.
இந்நிலையில் அவரை படம் பிடிக்க வேண்டாமென கேட்டபோது அவர் முரண்பட்டார், இதனையடுத்து தம்பதியினரின் பிரச்சனையை கேட்ட போது, அருகிலுள்ள சட்டவிரோத கட்டுமானம் பற்றி தெரிவித்தனர். அந்த வீடு கட்ட தொடங்கிய போது பிரதேசசபையின் அனுமதி பெறப்பட்டது.
எனினும் தற்போது, அதை மீறி கட்டுமானம் நடந்து வருகிறது. அதை நிறுத்துமாறு 3 முறை கடிதம் அனுப்பி விட்டோம். அவர்கள் நிறுத்த வில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதேவேளை, இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் சட்டவிரோத கட்டுமானத்தையே அமைத்துள்ளதாகவும் அவர்களிற்கு எதிராகவும் வழக்கு தொடர்வோம் என்றும், இரண்டு சட்டவிரோத கட்டுமானங்களையும் இடிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், குறித்த இரண்டு வீடுகளையும் இடிப்போம் எனவும் பிரதேசசபை தவிசாளர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.