நீர்கொழும்பு விடுதியில் வெளிநாட்டவர்கள் 18 பேர் செய்த மோசமான செயல்!
இலங்கையில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பாரிய நிதி மோசடி தொடர்பாக 16 சீனப் பிரஜைகள் மற்றும் இரண்டு கம்போடியப் பிரஜைகள் உட்பட 18 பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் நேற்று (27) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அங்கிருந்த விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான கணினிகள்
சந்தேக நபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் அது சார்ந்த இலத்திரனியல் உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 18 சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களை எதிர்வரும் 2026.04.06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சந்தேக நபர்கள் இலங்கையில் வேறு ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.