நாட்டு மக்கள் இவ்வாறு நடந்துகொண்டால் ஊரடங்கு அமுல்படுத்த தேவையில்லை!
நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது. ஒரு சில பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் உள்ளது என்பதை நன்கு அறிவோம்.
கொரோனா தொற்றை தீவிரப்படுத்தி, நாட்டு மக்களை பலி கொடுத்து அதனூடாக அரசியல் இலாபம் தேடும் படுமோசமான எதிர்க்கட்சியினரே தற்போது உள்ளார்கள் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொண்டன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது.
நாட்டை முடக்குவது தொடர்பில் மாத்திரம் கருத்துரைப்பது அவசியமற்றது. நாட்டை முடக்குங்கள் என்கிறார்கள், பின்னர் மூடுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். படுமோசமான எதிர்க்கட்சியினரே தற்போது செயற்படுகிறார்கள்.
கொரோனா தாக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை எதிர்தரப்பினர் முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான நிலையை வெற்றிக் கொள்ள முடியும். என்றார்.