CSK vs KKR: IPL 2021 வெற்றியாளர் யார்? பரபரப்பில் ரசிகர்கள்
ஐபிஎல் 2021 தொடர் இறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் யார் வெல்வார்கள் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த போட்டியில் 3 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே மற்றும் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவின் மிகப் பெரிய பலமாக இருப்பது சுழற்பந்து வீச்சாளர்கள். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் உல் ஹசன் என 3 பேரும் தரமாக பந்து வீசி வருகிறார்கள்.
இதனால் தான் கொல்கத்தா பேட்டிங்கில் மந்தமாக இருந்தாலும் குறைந்த ரன்களில் எதிரணியை அவுட்டாக்கி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. எனினும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை கொல்கத்தா அணிக்கு சவாலகவே இருக்கும். ஆரம்பத்தில் ருதுராஜ், டூபிளெசிஸ். மிடில் ஆர்டரில் உத்தப்பா, ராயுடு, தோனி. பின்வரிசையில் ஜடேஜா, பிராவோ என பலமாக இருப்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
இந்த நிலையில் இன்றையப் போட்டியில் யார் வெல்லுவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கணித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டவிட்டரில், நடப்பு ஐபிஎல் தொடரை உலகக் கோப்பையை வென்ற கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளர் கொண்ட அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என பதிவிட்டுள்ளார்.
மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் வென்றது. அவர் 2007 ஐசிசி டி 20 உலகக் கோப்பையையும் 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளார்.
அதோடு மோர்கன் & கோ இங்கிலாந்துடன் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 கோப்பையை வென்றது. மெக்கல்லம் மற்றும் ஃப்ளெமிங் நியூசிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள். ஃப்ளெமிங் சிஎஸ்கே அணிக்கும், மெக்கல்லம் கேகேஆர் அணிக்கும் பயிற்சியாளர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் வாசிம் ஜாஃபரின் பதிவு இரு அணிகளுக்கு பொருந்தும் என்பதால் ரசிகர்கள் வெற்றியாளர் யார் என்பதை காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.