அனர்த்தம் காரணமாக பூனைக்கும் எலிக்கும் திருமணம் ; அரசியல்வாதிகளின் திடீர் நட்பால் வெடிக்கும் விமர்சனம்
பாமர மக்களின் பிரச்சினைகள் தெரிந்த ஜனாதிபதியாக அனுர இருக்கின்றார். மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா? அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா? என்பதை அரசாங்கம் சிந்தித்துச்செயலாற்ற வேண்டும்.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பூனைக்கும் எலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதை காண்கின்றோம் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்தார்.

மலையக மக்கள்
அம்பாறை மாவட்டம், கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இன்று (13) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பூனைக்கும் எலிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளதை காண்கின்றோம். முஸ்லீம் கட்சிகள் சமூகத்தின் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்தி தீர்வு காண்பதற்காக ஒற்றுமைப்பட வேண்டுமே தவிர சாதாரணமாக நிகழ்வு ஒன்றில் ஒற்றுமையாவது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மலையக மக்களை வட கிழக்கில் குடியேற்ற வேண்டும் என கூறப்படுவது ஏற்கக்கூடிய வாதம் அல்ல.வேண்டும் என்றால் வட மாகாணத்தில் மாத்திரம் சுமந்திரன் மனோ கணேசன் கூறுவது போன்று குடியேற்றலாம்.
தேயிலை தோட்ட வேலைகளுக்காக தான் இந்தியாவில் இருந்து மலையக மக்களை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள்.எனவே தான் அரசாங்கம் அம் மக்களின் வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.