தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய அமைச்சர் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக , கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக மனு சமர்பிக்கப்பட்டபோது அதற்கான ஒப்புதலை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
அதன்படி அநுராதபுரம் சிறைச்சாலைப் பொறுப்பதிகாரி மற்றும் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு அழைப்பாணையை பிறப்பிக்கவும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், குற்றவியல் சட்டக்கோவையின்படி அமைச்சருக்கு எதிரான விசாரணையை முன்னெடுப்பது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மனுமீதான அடுத்தகட்ட விசாரணையை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிவரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.