சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கும் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
சஹரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்.
கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் 56 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 56 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பயணம் செய்ய பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 62 பேரின் வழக்குகள் இன்று வியாழக்கிழமை (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் ஏனைய 62 பேரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் 62 பேரையும்; எதிர்வரும் 5 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.