இலங்கையை உலுக்கிய தம்பதியினர் படுகொலை ; கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அம்பாந்தோட்டை ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயுதத்தால் தாக்கி படுகொலை
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல ரன்ன பகுதியில், உள்ள வீடொன்றினுள் செவ்வாய்க்கிழமை (7) அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுளைந்த ஐவர் அடங்கிய குழுவினர் வீட்டிலிருந்த தம்பதியினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்ற விசாரணை பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய செவ்வாய்கிழமை குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 வயதுடைய பெண் ஒருவரும் 27 தொடக்கம் 33 வயதுடைய 3 மூன்று நபர்களும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் ரன்ன பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதான நபர்களிடமிருந்து குற்றச்செலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி, போர் 12 ரக 2 தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்றுத் தோட்டாவும், 2 வெட்டு கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறுகாரணமாக கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரு துப்பாக்கித் தோட்டாக்களும் குறித்த பெண்ணின் உடலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழந்த நபர் கஹந்தமோதர பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் நேற்று அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.