நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடுமா?
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீரற்ற வானிலை
தற்போதைய மழைக்கால நிலைமை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து, சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபாசேன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது ஓரளவு மரக்கறி விநியோகம் உள்ள போதிலும், வரும் நாட்களில் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவக்கூடும்.
விநியோகம் குறையும் போது சந்தையில் மரக்கறி விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நிலவும் கடும் மழையினால் மக்கள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளதோடு, விற்பனை நடவடிக்கைகளும் மந்தகதியில் காணப்படுகின்றன.