யாழ்.பல்கலைகழகதில் கொரோனா அபாயம்; ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என அறிவிப்பு
கொரோனா பரவல் அபாயம் தீவிரமடையும் நிலையில் யாழ்.பல்கலைகழக ஊழியர்களை பணிக்கு செல்லாது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும், கல்விசார் ஊழியர்களின் செயற்பாடுகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் ஊழியர் சங்கத்தின் தலைவர் த.சிவரூபன் கூறியுள்ளார்.
இது குறித்து ஊழியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
பெரும் அபாயமாக மாறிவரும் கொரோனா சூழலில் யாழ்.பல்கலைக்கழக பணியாளர்களினை பெருந்தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும் முகமாக பணியாளர்கள் பணிக்கு வருதல் தொடர்பில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரதும் கருத்துக்கள் அறியப்பட்டு அதனடிப்படையில் இன்று பணியாளர்கள் அனைவரும் பணியிடங்களிற்குச் செல்லாமல் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுத்தப்படுகின்றனர்.
அதோடு இன்றையதினம் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் அறியத்தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை வரை நடமாடித் திரிந்த ஒரு ஊழியர் கொரோனாவால் மரணமடைந்த நிலையிலும்., கிளிநொச்சி வளாகம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், துணை மருத்துவ கற்கைகள் பீடம், இந்து கற்கைகள் பீடம், இராமநாதன் மண்டப நிர்வாக தொகுதி, பராமரிப்பு கிளை, பாற்பண்ணை மாணவர் விடுதி ஆகிய இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் அவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எவ்வித பொறுப்புமற்று பணிக்கு வரும் நிலையிலும், ஏற்பட்டுள்ள அபாய நிலையை கருத்தில் கொண்டு இவ் அவசர முடிவை எடுக்க நேரிடுகிறது.
இவ்விடயங்கள் துணைவேந்தர் அவர்களுக்கும் , கொரோனா பாதுகாப்புக்குழு தலைவர் மருத்துவர் சுரேந்திரகுமார் அவர்களுக்கும் அறியத்தரப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ் பல்கலைகழக நிர்வாக கட்டத்தொகுதி முழுவதும் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகக் கிளையினரால் முன்னெடுக்கப்பட்டது.




