இலங்கையில் தொடர்ச்சியான மின்வெட்டால் மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்வெட்டால் இந்த தடவை க.பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக மாந்தை கிழக்கு பகுதியில் இந்த தடவை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவர்கள்,
உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த காலப்பகுதியிலாவது மின்வெட்டை நிறுத்தி சீரான முறையில் மின்சாரத்தை வழங்குமாறும், அவ்வாறு வழங்கும் பட்சத்தில் தம்மால் பரீட்சைகள் மீதும், உரிய கவனம் செலுத்த கூடியவாறு இருக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை மின்தடை பற்றி கருத்து தெரிவித்த பெற்றோர்,
மாணவர்களின் நிலையினை கருத்தில் கொண்டாவது இந்த பரீட்சைகள் இடம்பெறும் காலப்பகுதிகளிலேன்றாலும் சீரான மின்சார விநியோகத்தை வழங்குமாறும் தெரிவித்தனர்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .