தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராக விடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் முன்கூட்டியே கசிந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீது வழங்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், 2024 டிசம்பர் 31ஆம் திகதி அதன் தீர்ப்பை அறிவித்திருந்தது.

அந்தத் தீர்ப்பின்படி, அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க, தனது சொந்தப் பணத்திலிருந்து 3 மில்லியன் ரூபாயை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து நான்கு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், பிரதிவாதியான பிரேமதிலக்க இதுவரையில் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனவும், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கை இன்று (23) உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான தனது தீர்மானத்தை அறிவித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரதிவாதியான பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டதுடன், எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.