கொழும்பில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து ; போக்குவரத்து நெரிசல்
கொழும்பு - கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பேலியகொடை நோக்கித் திரும்ப முற்பட்டபோதே குறித்த கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் தெமட்டகொடை - பேலியகொடை வீதியின் இரு வழித்தடங்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
இந்தநிலையில் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தை அண்மித்த பகுதிகளில் தற்காலிகமாக இருவழிப் போக்குவரத்து முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தை அகற்றும் மற்றும் வீதியைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.