சினிமா பாணியில் கடத்தல்; வயிற்றுக்குள் 'ஐஸ்' போதைப்பொருள் வெடித்து நடத்துனர் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர், வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொதரவான, ருக்தெனகஹ கொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பஸ்நாயக்ககே குணரத்ன (வயது 51) என்பவர் ஆவார்.

மரணச்சடங்கில் உடல்நலக் குறைவு
தங்காலையிலிருந்து மாகும்புர வரை பயணிக்கும் தனியார் பேருந்தொன்றில் தற்காலிக நடத்துனராகப் பணியாற்றி வந்த இவர், கொழும்புப் பகுதியில் இரவைக் கழித்துவிட்டு, பின்னர் மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிப் பேருந்தில் வந்துள்ளார்.
பேருந்து தங்காலை வந்தடைந்ததும், அதன் உரிமையாளரிடம் பேருந்தின் சாவி மற்றும் அன்றைய தினத்திற்கான பணத்தை ஒப்படைத்துவிட்டு, தங்காலை நகரில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் நடைபெற்ற மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்காலை பேருந்து நிலையத்திற்கு வந்த நடத்துனர், திடீரென தரையில் விழுந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் ‘1990 சுவசரிய’ அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலம் தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மரண விசாரணையைத் தங்காலை மரண விசாரணை அதிகாரி ஷியாமல் வர்ணகுலசூரிய, தங்காலை ஆதார மருத்துவமனையில் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றுக்குள் (இரைப்பையில்) ‘ஐஸ்’ போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும், தலா 20 கிராம் எடையைக் கொண்ட 2 பாக்கெட்டுகள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அதில் ஒரு போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்ததன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.