கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீரென முடக்கிய செயற்பாடுகள்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பல கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (14-08-2023) காலை 10.00 மணிமுதல் 8 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், மின் தடையால் வைத்தியசாலையின் தொலைபேசி சேவை மற்றும் குளிரூட்டி அமைப்பும் செயலிழந்துள்ளதாகவும், மருத்துவர்கள் மின்விளக்குகளின் உதவியுடன் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை மின்வெட்டு துண்டிக்கப்பட்டதால், இரத்த வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இரத்தம் மற்றும் சில மருந்து வகைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவு இயந்திரங்களை மின்பிறப்பாக்கியில் இருந்து இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.