பச்சிளம் குழந்தைக்கு எமனான தேங்காய்
தேங்காய் தலையில் வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கண்டி கலஹா , தெல்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாத பெண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பாதுகாப்பற்ற தென்னை மரங்கள்
தந்தை குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு அயல் வீட்டிற்குச் சென்று மீண்டும் வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு முன்னால் தென்னை மரமொன்றிலிருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் வீழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த குழந்தை தெல்தோட்டை பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டு பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் வசிக்கும் வரிசை வீடுகளுக்கு அருகாமையில் உள்ள தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் பாதுகாப்பற்ற முறையில் தரையில் விழுந்து கிடப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீடுகளில் சிறுவர்கள் மற்றும் பலர் இருந்த போதும் இங்குள்ள அபாயம் தொடர்பில் அவர்கள் அதிக கவனம் செலுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.