அத்துருகிரிய கொலை சம்பவம்... சந்தேகநபர்களுக்கு நீதவான் வழங்கிய உத்தரவு!
கொழும்பு - அத்துருகிரியவில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட 12 சந்தேகநபர்களும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று (13) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சானிமா விஜேபண்டார உத்தரவை வழங்கினார்.
கிளப் வசந்தவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கடந்த மாதம் 29ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டார்.
கொலை செய்த குழுவினருக்கு தங்குமிட வசதி மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் தென்மேற்கு குற்றப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, கிளப் வசந்த சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் கடந்த மாதம் 28ஆம் திகதி பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.