யாழில் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக ஊடகவியலாளரை வெளியேற்றிய நகர பிதா!
யாழ். சாவகச்சேரி நகர சபை மாதாந்தக் கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர், நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
நகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று (19) நகர பிதா வடிவேலு சிறிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. அதன்போது, கடந்த கூட்டறிக்கையில் பல விடயங்கள் விடுபட்டுள்ளன எனவும், யார் யார் என்ன கருத்துக் கூறினார்கள் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை எனவும் உப நகர பிதா ஞா.கிசோர் கடந்த கூட்டறிக்கை வாசித்த போது தனது எதிர்ப்பை வெளியிட்டார்.
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்
அதன்போது உப நகர பிதாவின் உரையை இடைநிறுத்திய நகர பிதா, அங்கிருந்த ஊடகவியலாளரை வெளியேற்றுமாறு நகர சபை உத்தியோகத்தர்களுக்குப் பணித்தார்.
அதனையடுத்து கூட்டத்தில் இருந்த ஊடகவியலாளர், தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதிலும், சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதியில்லை எனக் கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
உள்ளூராட்சி சபைகளின் மாதாந்தக் கூட்டங்களில் ஊடகங்கள் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சபைகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகர சபையில் மாத்திரம் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என ஊடகவியலாளரை அங்கிருந்து நகர பிதா வெளியேற்றிய சம்பவம் சக ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி நகர சபை நகர பிதா தெரிவின்போது, ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சபையில் நடைபெறும் விடயங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதைத் தடுக்கும் முகமாகவே ஊடகவியலாளரைச் சபையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கடந்த கூட்டறிக்கையில் உள்ள குறைபாடுகளை உப நகர பிதா சுட்டிக்காட்டி உரையாற்றும்போது, ஊடகவியலாளரை நகர பிதா அங்கிருந்து அப்புறப்படுத்தியமை தனது தவறுகளை வெளியில் தெரியாமல் தடுக்கவே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.