அரச பணத்தை சுருட்டிய பொலிஸ் உயரதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
அரச பணத்தை சுருட்டிய பொலிஸ் உயரதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிந்த காலத்தில் தனது தனிப்பட்ட காருக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கப் பணமான 2,43,600 ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.
கோட்டை பொலிஸில் முறைப்பாடு
அது தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரிடம் விசாரணை நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் பிரசாத் தண்டநாராயணா அச்சுறுத்தப்பட்டு ஆபாசமாக பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (17) உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அத்தியட்சகர் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் சேவையை விட்டு விலகியதாக கருதப்பட்டு அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.