இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை வரும் சீன கப்பல்!
சீனாவின் கடுமையான அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான்வாங் 5, எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு திட்டமிட்டப்படி பயணிக்கும். பின்னர் 17ஆம் திகதியன்று அங்கிருந்து புறப்படும் என்று இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் நேற்று இரவு (06-08-2022) வரை எவ்வித மாற்றங்களும் இல்லை என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை கோரியுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும், இந்திய ஊடகத்தின் தகவல்படி, அவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று வரை இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மற்றும் சீன அரசாங்க தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.