இலங்கையில் வீதி விபத்தால் உயிரிழந்த 115 சிறுவர்கள்
இலங்கையில் வீதி விபத்துக்கள் மூலம் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 115 சிறுவர்கள் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ள கருத்து
"2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடம் ஆரம்பம் முதல் 10/15/2023 வரையான காலப்பகுதிக்குள் 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 115 சிறுவர்களையும் இழந்துள்ளோம்.
இது மிகப் கவலைக்குரிய விடயமாகும். வீதி விபத்துக்களில் அதிக தொழிலாளர்களை நாம் இழக்கிறோம்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம். குறிப்பாக சிறுவர்களும் வீதி விபத்துக்களில் இறக்கின்றனர்.
தாய் மற்றும் தந்தை ஹெல்மெட் அணிந்து தங்கள் மகனையோ மகளையோ நடுவில் வைத்து ஏற்றிச் செல்கிறார்கள்.
நடுவில் செல்லும் அவருக்கு ஹெல்மெட் இல்லை, அன்புள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
விபத்து ஏற்பட்டால் அந்த பிள்ளைக்கே அதிக பாதிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.