பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ச்சுனாவுக்கெதிராக இக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பொலிஸாரின் பணிக்கு இடையூறு
அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து, பொலிஸார் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதேமேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.