கொழும்பில் நடுவீதியில் நேர்ந்த குழப்பம்; சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி
கொழும்பு கடவத்தை பகுதியில் நபரொருவர் தனது மனைவியை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இதனை அவதானித்த சிலர் தாக்குதலை தடுக்கச் சென்றவேளை, அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் சரிந்து கீழே விழுந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்களிடம், தன்னை தாக்கியது கணவரென்றும், அவர் தனது வயிற்றில் கடுமையாக தாக்கியதால் தான் சரிந்து விழுந்ததாகவும், வீதி முழுவதும் தன்னை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஒன்று கூடிய பிறகு, குறித்த நபர், இது தனது மனைவி எனவும், தாம் பொலன்னறுவையில் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தனது மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அரவணைத்து அருகில் அமர்த்திக் கொண்டுள்ளார். எனினும், அருகில் இருந்தவர்கள் குறித்த நபரை கடுமையாக வசைபாடினர்.
அதன் பின்னர், அங்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கடுமையாக எச்சரித்ததுடன், அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்து பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தனது மனைவியை தாக்கிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.