பொசன் காலப்பகுதியில் இந்த வாகனங்களுக்கு தடை ; கடும் நடவடிக்கை நிச்சயம்
பொசன் காலப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட ஒலிப்பான்களை பயன்படுத்தி அதிக சத்தத்துடன் குழுக்களாக பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட போக்குவரத்து நடவடிக்கை
இது குறித்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், மாற்றியமைக்கப்பட்ட ஒலிப்பான்களைப் பொருத்தியுள்ள உந்துருளிகளை கைப்பற்றுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வாகனங்களைச் செலுத்துபவர்கள், மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகனத் திருத்த நிலைய உரிமையாளர்கள் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். உந்துருளி ஓட்டுநர்களுக்கு வாகனங்களை மாற்றியமைக்கத் துணைபுரியும் நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வெசாக் தினத்தின் போது, இளைஞர்கள் குழுவினர் வீதி விதிகளை மீறிச் செயற்பட்டதாலும், பொதுமக்களுக்குக் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியதாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
பொசன் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த கடுமையான சட்ட அமுலாக்கம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.