அமைச்சர் நாமல் ராஜபக்ச வந்து சென்ற பின்னர் யாழில் ஏற்பட்ட மாற்றம்; எழுந்துள்ள சர்ச்சை!
யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டுவருகின்ற குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு பௌத்த கொடியிலுள்ள நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
1996 ஆம் ஆண்டு 1.51(0.6063) ஏக்கராக இருந்த குளததின் பரப்பளவு 2013 ஆண்டு மீள அளக்கப்பட்ட நிலையில்1.26(0.5078) ஏக்கராக குறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த குளம் தற்போது புனரமைக்கும்போது குளத்திலிருந்து தூர்வாரப்பட்ட மண்ணை மீண்டும் குளத்தின் சுற்றுப்புறங்களில் கொட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இவ்வாறான யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த குளத்தின் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டிருந்தார்.
அவர் பார்வையிட்டு சென்ற நிலையில் பிள்ளையார் குள பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
குறித்த வர்ணங்கள் தொடர்பாக பிரதேச மக்களால் யாழ் மாநகரசபை முதல்வரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளை தொடர்பு கொண்டு யாழ் மாநகரசபை முதல்வர் அது தொடர்பில் பேசியிருந்தார்.
இந்நிலையில் குள புனரமைப்புக்காக அந்த பகுதி மக்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது என்றும், அந்த குழுவின் சம்மதம் பெற்ற வர்ணங்களே தீட்டப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த வர்ணம் தீட்டும் பணியை இடைநிறுத்துமாறு யாழ் மாநகரசபை முதல்வர் கேட்டுக் கொண்டதையடுத்து, அந்த வர்ணங்கள் இடைநிறுத்தப்பட்டு, வேறு வர்ணங்கள் தீட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

