கபில சந்திரசேன வின் பிரேத பரிசோதனை அறிக்கை நாளை மறுநாள் நீதிமன்றத்தில் சமர்ப்பணம்
சடலமாக மீட்கப்பட்ட ஸ்ரீலங்கா எயார் லைன்ஸின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை சனிக்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டது.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நியமித்த கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐவர் கொண்ட குழு இந்த பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்தது.
Travel Guides & Travelogues கொழும்பு, சட்ட வைத்திய மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தினால் இந்த நடவடிக்கைகள் முற்பகல் முதல் இடம்பெற்றன.

அதன்படி, இந்த பிரேத பரிசோதனை அறிக்கை, திங்கட்கிழமை (11) கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் மரண விசாரணைகளில் இந்த அறிக்கை நிபுணத்துவ சான்றாக ஆராயப்படவுள்ளது.
இதனிடையே கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடமிருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் இந்திக்க லொக்குஹெட்டியின் கீழ் சிறப்புக் குழுவொன்று இந்த மரணம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேன மீண்டும் கைது செய்வதற்கு கடந்த ஏழாம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், கடந்த எட்டாம் திகதி காலையில் கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள 37ஆம் இலக்கமுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வாவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கபில சந்திரசேனவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.