ஆப்கான் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட கனடா பிரதமர்!
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், 40,000 ஆப்கானிஸ்தான் அகதிகளை தாம் ஏற்றுக்கொள்வதாக கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது.
அத்துடன் அகதிகளை மீளக்குடியமர்த்துவதற்கான ஆதரவை அதிகரிக்குமாறும் ஏனைய நாடுகளை கனடா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau),
"கனடா 40,000 ஆப்கான் அகதிகளை வரவேற்கிறது, அகதிகளை பாதுகாப்பாக மீளக்குடியமர்த்துவதற்கு தங்கள் ஆதரவை அதிகரிக்குமாறு மற்றவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்“ என பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து ஜி 20 தலைவர்களுடன் பிரதமர் ட்ரூடோ (Justin Trudeau) உரையாடிய பிறகு இதனை தெரிவித்துள்ளார்.
"இன்று, நான் ஜி 20 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பேசினேன். உலக சமூகம் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியை அணுகுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் , ” என பிரதமர் (Justin Trudeau) தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பிறகு அந்நாடு பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலையில் ஆப்கான் எல்லைகளுக்கு வெளியே தஞ்சம் புகுந்த ஆப்கானியர்களின் நிலைமை குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுவதால், அங்கு மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக சர்வதேச சமூகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.