சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்த அனுமதி!
சந்தைக் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக அளவு சார் மற்றும் பண்பு சார் இருபிரிவுகளிலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்ல என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி பணிகள்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அபிவிருத்தி பணிகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வேறுவேறாக அரச தொழில் முயற்சியாக சப்புகஸ்கந்த எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவி பொருத்தமான மூலோபாய முதலீட்டுப் பங்காளரை அடையாளங் காண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
திருகோணமலைப் பிரதேசத்தில் புதிய எண்ணெய்ச் சுத்திகரிப்பை நிறுவுவதற்கான இயலுமைகளைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரை அதுதொடர்பாக எவ்வித படிமுறைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமகால அரசின் வலுசக்திக் கொள்கைச் சட்டத்தின் கீழ் பேணப்படும் சுத்திகரிப்பு நவீனமயப்படுத்தல் அல்லது புதிய சுத்திகரிப்பை நிர்மாணித்தல் முதன்மைப் பணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியவளக் கற்கையின் அடிப்படையில் பொருத்தமான முதலீட்டுப் பங்காளர்களை அடையாளங் காண்பதற்கான விருப்பக் கோரலுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் குறித்த வளாகத்திலேயே நிர்மாணித்தல், செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் (BOT) அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி, நாளொன்றுக்கு 100,000 பரல்கள் கொள்ளளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்பை நிறுவுகின்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பக்கோரலை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் தகைமைகளைப் பூர்த்தி செய்கின்ற நிறுவனத்திடம் கருத்திட்ட முன்மொழிவுகளைக் கோருவதற்கும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.