பாதுகாப்பற்ற வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்ட வட்டுவாகல்
பரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் 50/1 ஆம் இலக்க பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக வட்டுவாகல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி கிடைக்கப்பெற்ற விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய, இந்த நிர்மாணப் பணிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.