பாடசாலை மாணவர்களிடம் துப்பாக்கி ரவைகள் ; பொலிஸார் , இராணுவம் வரவழைப்பு
பாடசாலை மாணவர்களின் உடைமையில் இருந்து பயன்படுத்தாத பல துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் , கண்டி - ஹசலக எல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி, சிறுவர்கள் பலர் நேற்று (19) தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் இந்த ரவைகளைக் கண்டுள்ளனர்.
விளையாடுகையில் கிடைத்த ரவைகள்
ரவைகளை கண்டெடுத்த சிறுவன் தனது நண்பர்களுக்கும் அதனை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனக்குக் கிடைத்த ரவையை அடுப்பில் போட்டு போது தோட்டா வெடித்துள்ள நிலையில், வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் வருகைதந்து வெடிப்பு நடந்த வீட்டை ஆய்வு செய்து, அங்கு நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேற்படி தகவல்கள் தெரியவந்தது.
இந்த ரவைகளை முதலில் கண்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவரது வீட்டிற்கு அடுத்துள்ள மற்றொரு வீட்டில் உள்ள விறகு மடுவத்தில் இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்தார்.
சிறுவர்களிடம் இருந்து சுமார் 30 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.