பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் மீது கொடூர தாக்குதல் ; தொடரும் அடாவடித்தனங்கள்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவர், பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதே ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட மாணவர், பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடியதும் இந்தத் தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 20 மாணவர்கள் அவரது விடுதிக்கு வந்து, தலைக்கவசத்தால் தலையிலும் முதுகு பகுதியிலும் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கியதாக அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.