பிரிட்டனின் தடைகள்; ஜனாதிபதி அனுர மீது சீறும் நாமல் ராஜபக்க்ஷ!

Sulokshi
Report this article
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார் .
முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் மீது பிரிட்டனின் புதிய தடைகள் தொடர்பில் தெரிவிக்கையில் நாமல் ராஜப்பக்க்ஷ மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மேற்குலகம் முன்னாள் போர்வீரர்களை இலக்குவைக்கின்றது
பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த நாடு இலங்கை, ஆனால் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி வழங்கி அவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையை நியாயப்படுத்தியவர்களை புறக்கணித்தபடி மேற்குலகம் எங்களின் முன்னாள் போர்வீரர்களை தெரிவு செய்து இலக்குவைக்கின்றது.
பிரிட்டனின் புதிய தடைகள் - மனித உரிமைகள் தொடர்பானது இல்லை என் கூறிய நாமல் ,மாறாக அவை நிரந்தர அமைதியை கொண்டுவந்தவர்களிற்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கங்கள் செயற்படவேண்டும் என்ற விடுதலைப்புலிகள் ஆதரவு இடைவிடாத பரப்புரையின் விளைவே இந்த தடைகள் என்றும் குறிப்பிட்டார்.
இது நீதியில்லை என்றும், சில மேற்குலக அரசியல்வாதிகள் பரப்புரை பணத்தை ஆதரிப்பதன் மூலம் அதன் சலுகைகளை அனுபவிக்கின்றனர் ,இதன் மூலம் எங்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.
நாங்கள் இன்று அனுபவிக்கின்ற சுதந்திரம் கடுமையான நடவடிக்கைகள் மூலமே சாத்தியமானது என்பதை வடக்கின் தெற்கின் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
அதோடு இந்த தடைகள் எங்கள் படையினரின் மனோநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்,நாங்கள் தற்போது அவர்களிற்கு ஆதரவளிக்காவிட்டால் மற்றுமொரு நெருக்கடி உருவானால் அவர்கள் போரிடுவதற்கான துணிச்சல் அற்றவர்களாக காணப்படுவார்கள்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையில்லை
தடைகளிற்கு பின்னால் உள்ளவர்களிற்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையில்லை, அவர்கள் பிரச்சினைகளை உருவாக்கி நல்லிணக்கத்திற்கு மேலும் பாதிப்புகளை உருவாக்குகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குழப்புவதே அவர்களின் உண்மையான நோக்கம் என கூறிய நாமல் ராஜபக்க்ஷ , குறிப்பாக தற்போது வடக்குகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தேசிய கட்சிகளிற்கு வாக்களிப்பதற்கான தெளிவான பாதை உள்ளது.
எவரும் சமூகங்களிற்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்த நாமல், இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்,எந்த இனக்குழுமத்திற்கும் எதிரானது இல்லை,
தமிழ் சமூகங்கள் இடையே பிளவினை ஏற்படுத்துவதற்காக சில அரசசார்பற்ற அமைப்புகளிடமிருந்து சலுகைகளை பெறும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலிற்குள் சிக்க கூடாது என தமிழ் சமூகத்தினை நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் கூறினார்.
அனுரகுமாரதிசநாயக்க விஜிதஹேரத் ஆகியோருக்கு எங்களின் இராணுவத்தினரின் தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தியவர்களின் ஆதரவுடனேயே நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை நீங்கள் பாதுகாப்பீர்களா? நாங்கள் எங்கள் முன்னாள் படைவீரர்களை எப்போதும் பாதுகாப்போம்.
எப்போதும் என்றென்றும்,அவர்களின் தியாகங்கள் எங்களிற்கு அமைதியை பெற்றுத்தந்தன, அவர்களின் பாரம்பரியத்தை எவரும் அழிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்றும் நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்தார்.