முப்படைத்தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம்; பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய அரசியல்வாதி!
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.
அந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த நிலையில் காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததுடன் கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவும், வெலிங்டன் ராணுவ மையக் குழுவும் இதனைக் கண்டுபிடித்தது.
சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற தீவிரமான தேடுதலுக்குப் பிறகு இந்த கறுப்புப்பெட்டியைக் குழு கண்டுபிடித்ததாகவும் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்கப்பட்ட கருப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர், தற்போது விபத்து நடந்த காட்டேரி பகுதியில் தடயங்களைச் சேகரித்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Doubts about how CDC, his wife, and several senior military officers died is bound arise. Hence Govt must head the Govt inquiry by an outsider such as a SC judge
— Subramanian Swamy (@Swamy39) December 9, 2021
இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த அவரது டிவிட்டில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதனால் மத்திய அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி போன்ற வெளியாட்கள் தலைமையில் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி
விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட முப்படைத் தளபதி பிபின் ராவத்! வெளியான தகவல்