அம்பாறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் உயிரிழப்பு!
அம்பாறையில் ஆலையடி வேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் 7 வயது சிறுவன் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (29-12-2022) ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
குடிதண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் குறித்த பகுதியில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் நிரம்பிய நீரை அவ்வப்போது சில தேவைகளுக்காகச் சிறுவனின் குடும்பம் பயன்படுத்தியுள்ளது.
இதனை அவதானித்துள்ள அந்தச் சிறுவனும் அந்தக் குழியில் யாரும் அவதானிக்காத நேரத்தில் நீரை அள்ள முயற்சித்துள்ளார்.
இதன்போது குறித்த சிறுவன் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மரணமடைந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.