கொழும்பு ஜா-எல கடற்கரை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு
கொழும்பு ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை பகுதியிலிருந்து போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இன்று முற்பகல் உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளமையும், நேற்றிரவு வேளையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர்மீது டி-56 ரக துப்பாக்கியில் சுமார் 10 தடவைகள் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகிலிருந்து 9 செயலிழந்த தோட்டாக்களையும் விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவரான பட்டுவத்தே சாமர என்பவரின் உறவினர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் உள்ள இஷார என்ற நபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பிற்கு அமைய, அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் உஸ்வெட்டகெய்யாவ பகுதிக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.