இலங்கையிலும் பிட்காயின் முதலீட்டுக்கு அனுமதி!
இலங்கையில் கிரிப்டோகரன்சி (பிட்காயின்) மயினிங் நிறுவனங்கள் முதலிடுவதற்கு அனுமதிக்கும் முதலீட்டு சபையின் அனுமதியை அமைச்சரவை அங்கிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி, டிஜிட்டல்மயமான வர்த்தக சூழலை ஏற்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காக டிஜிட்டல் வங்கி முறைமை, ப்ளொக்செயின் தொழிநுட்பம் (Blockchain technology), க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining) மற்றும் தேவையான இதர சேவைகளை வழங்குதல் போன்ற துறைகள் உள்ளிட்ட கூட்டிணைந்த தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
தெற்காசியவில் அதிகமான நாடுகள் குறித்த துறைகளை மதிப்பிடல் மற்றும் அபிவிருத்தி செய்வதை ஏற்கனவே தொடங்கியுள்ளன. இந்நிலையில் அந்த நாடுகளுடன் போட்டித்தன்மையில் செயற்படுவதற்கு இயலுமான வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துரித கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதற்கமைய, குறித்த துறைகளில் செயற்படும் கம்பனிகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அவசியமான விடயங்களை அறிக்கைப்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவமான தொழில்வாண்மையாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், 1978 ஆம் ஆண்டும் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கமைய, க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining) கம்பனிகளுக்கு இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நாமல் ராஜபக்க்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.