மட்டக்களப்பில் உள்ள பிரபல கல்லூரி மாணவர்கள் படைத்த சாதனை!
தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையில் உள்ள பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியை சேர்ந்த மூன்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
குறித்த சாதனை நிகழ்விற்காக நேற்று (21-10-2023) மாலை 4.00 மணியளவில் நீச்சல் குழுவினர் தனுஷ்கோடி கரைக்குச் சென்று இன்று (22-10-2023) அதிகாலை 3.00 மணியளவில் கடலில் குதித்து நீச்சல் நிகழ்வை ஆரம்பித்து மதியம் 1.00 மணியளவில் தலைமன்னார் கரையை வந்தடைந்தனர்.
குறித்த மாணவர்களை மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர்கள் உட்பட பல கல்வியாளர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மேலும், இந்த சாதனை நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சாரணர்களின் 150 வருட நிறைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்களும், 15 வயதுக்குட்பட்ட ஒரு மாணவரும் பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்தவர்களுக்கான சான்றிதழ்களை சோழன் ஆசிய சாதனை அமைப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.