மட்டக்களப்பு கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி உற்சவம்
மட்டக்களப்பு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம் நேற்று மாலை பக்தர்களின் ஆரோகரா கோசத்துடனும், சிலம்பு ஒலியுடனும் திருக்குளிர்த்தி ஆடல் வைபவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, வந்தாறு மூலை 7 குடிமக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்கு நடைபெற்று, நேற்று மாலை வைகாசி திங்கட்கிழமையன்று திருக்குளிர்த்தி வைபவத்துடன் திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது.
அதனைத்தொடர்ந்து, நேற்றைய நாள் சாடிப்பானை எடுத்து பக்கப்பானைகள் வைத்தலுடன், பொங்கல் வைபவம் இடம்பெற்றது.

மேலும், இவ்வருடம் வழக்கத்திற்கு மாறாக அடியார்கள் பசும்பாலில் பொங்கல் தயாரித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவ்வாலயத்தில் சிலம்பு ஓசை கேட்டமையால், அம்மாவட்டத்தில் உள்ள மக்கள் பலர் சென்று சிலம்பின் ஒலியினை கேட்டலானது , அம்பாளின் அற்புத செயலாக கருதப்பட்டு அம்பாளை போற்றி வணங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.