இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே, இந்த தகவல் வௌியாகியுள்ளது.

கோரிக்கைகள்
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஜீவ் அமரசூரிய, குறித்த கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாகக் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.