யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி ; இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்
இலங்கையில் நிலவும் யானை - மனித மோதலைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூங்கில் உயிரி வேலிகளை (Bamboo bio-fences) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள மூங்கில் மற்றும் பிரம்பிற்கான சர்வதேச மையத்திற்கு (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இவ்விஜயத்தின் போது, அக்குழு மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இதில் மூங்கில் பயிர்செய்கை, மேம்பட்ட பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகளின் வளர்ச்சி ஆகியவை குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
யானை - மனித மோதலுக்கு நிலையான தீர்வாக இலங்கையில் மூங்கில் உயிர் வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஆதரவை பிரதி அமைச்சர் ஜெயக்கொடி உத்தியோகபூர்வமாகக் கோரினார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கச் சீனத் தரப்பு தனது ஆயத்தத்தை வெளிப்படுத்தியது.
மேலும், இத்திட்டம் யானை - மனித மோதலுக்கு நீண்டகாலத் தீர்வை வழங்குவதோடு, மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனச் சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.