ஊழியரை தாக்கிய உணவக உரிமையாளருக்கு பிணை; பகிரங்கமாக மன்னிப்பு
ஊழியரைத் அச்சுறுத்தி, தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (30) அனுமதித்தது.
மத்தேகொட பிரதேசத்தில் உள்ள தனது உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பில், காவல்துறையால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பகிரங்கமாக மன்னிப்பு
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டதன் மூலம் சமூகத்தில் பாரிய பரபரப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியர் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்ததாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர். சந்தேகநபர் இன்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விராஜ் விக்ரமநாயக்க,
"என் தரப்பில் தவறு நடந்துவிட்டது. முழு நாட்டு மக்களிடமும், எனது ஊழியர்களிடமும் நான் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எதிர்காலத்தில் ஒரு புதிய பயணத்தைத் தொடர எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.