1000 அடி பள்ளத்தில் பாயவிருந்த பஸ்; சாரதியின் சாதுரியத்தால் தப்பிய பயணிகளின் உயிர்கள் !
பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்த போது, சாரதி பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தி 14 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மண் மேட்டில் மோதி நிறுத்திய சாரதி
காலை 6.35 மணியளவில் பதுளையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து பதுளை – மஹியங்கனை வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த போது, பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்துன் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகின்றது.
இதனியடுத்து சாரதி உடனடியாக பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
பயணிகளுக்கு சிறு கீறல் கூட ஏற்படாமல் அனைவரும் காப்பாற்றப்பட்டதாகவும், உடனடியாக பேருந்தை மண் மேட்டில் மோதி நிறுத்தியிருக்காவிட்டால் பேருந்து ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்து பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் சாரதி தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட பேருந்து நடத்துனர், “நான் பயணிகளிடம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமாறு கூறினேன். சாரதி மிகச் சரியாகக் கணித்து மண் மேட்டில் பேருந்தை மோதச் செய்து நிறுத்தினார்” எனக் கூறினார்.
அதேவேளை கடந்த காலங்களில் இந்த வீதியில் பல கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் பிரேக் கோளாறுகளே காரணம் எனவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.