புலிகளின் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி ; குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 16 தமிழ் இளைஞர்கள் இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன், அவர்களை விடுதலை செய்ய இன்று உத்தரவிட்டார்.
2017 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றனர் என்றும்,
2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்களை சேகரித்தனர் என்றும் குற்றம் சுமத்தி, சட்ட மா அதிபரால் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், பிரதிவாதிகளின் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்ற, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, குறித்த 16 பேரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
சட்ட மா அதிபரின் குற்றப்பத்திரம் நடைமுறையில் இருந்தாலும் , நீதிமன்ற நியாயாதிக்க எல்லை என்ற அடிப்படையில், குறித்த 16 பேரும் யாழ்ப்பாணம் பிராந்தியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் வழக்கை விசாரிக்க முடியாது என்ற பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்தை ஏற்ற நீதிபதி, குறித்த 16 பேரையும் விடுதலை செய்துள்ளார்.